புதுடில்லி : மத்தியில் ஆளும் அரசாக திகழும் காங்கிரசில் வரிசையாக பல அமைச்சர்கள் தங்களுடைய பதவியை இழந்து வருகின்றனர். ஸ்பெக்டரம் என்ற ரூபத்தில் மத்திய அரசை ஆட்டி படைத்து வரும் சர்ச்சையில் இருந்து காங்கிரஸ் மீள முடியாமல் திணறி வருகிறது.
ரிலையன்ஸ் தகவல் தொடர்பு நிறுவனம் யுனிபைடு அக்சஸ் சர்வீஸ் உரிமம் பெற்றதில் தவறான முறையை கையான்டதற்காக, அந்நிறுவனத்துக்கு, தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம், 650 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும். இதை, சட்டத்துறை அமைச்சகத்தின் உதவியோடு செயல்படுத்த வேண்டும். ஆனால், அப்போது, சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த வாகன்வதி, சட்டத்துறை அமைச்சகத்தின் விதிமுறையை புறக்கணித்து, அப்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ராஜாவுக்கு சில ஆலோசனைகளை கூறியுள்ளார்.
ராஜா பதவி விலகியதும் அந்த பதவியை கூடுதலாக வகிக்கும் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு விதிக்கப்பட வேண்டிய, 650 கோடி ரூபாய் அபராதத்தை, வெறும், ஐந்து கோடியாக குறைத்து சலுகை காட்டியுள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., கபில் சிபலையும், வாகன்வதியையும் விசாரிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, வரும் 11ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கை லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் இடம்பெற்றுள்ள சாந்திபூஷண் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது., ஆனால் இது தொடர்பான விஷயத்தில் சட்டமீறல்கள் நடக்கவில்லை. மேலும் ரிலையன்சுக்கு சலுகை காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். தம் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உள்நோக்கம் கொண்டவை என்றும் இன்று நிருபர்களிடம் பேசிய கபில்சிபல் கூறினார்.
இதற்கிடையில் இவர் மீது கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இவர் பதவியில் நீடிக்க தகுதி கிடையாது என பா.ஜ., உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரிந்து கட்டியுள்ளன. இவர் ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையேல் பிரதமர் இவரை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளன. வரும் 11 ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை பொறுத்து இவரது பதவி தப்புமா என்பதற்கு விடை தெரியும்.





0 comments:
Post a Comment