புதுதில்லி, பிப். 24: 2-ஜி அலைக்கற்றை ஊழல் புகார் தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அருண் செளரியிடம் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்துவார்கள் என்று தெரிகிறது.
தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அருண் செளரி ஆஜராக உள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அருண் செளரியை(பா.ஜ.க)அணுகிய சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டனர்.
வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 2003 ஜனவரியில் இருந்து 2004-ம் ஆண்டு மே மாதம் வரை அருண் செளரி தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தனக்கு முன்பு இருந்த அமைச்சர்கள் பின்பற்றிய கொள்கைகளையும் வழிமுறைகளையே தானும் பின்பற்றியதாக திரும்ப திரும்ப கூறி வந்தார்.
இதையடுத்து 2001-ம் ஆண்டிலிருந்து அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்து விசாரிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கை வாஜ்பாய் ஆட்சியிலேயே கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது அலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக செய்யப்பட்டதா என்று விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
அருண் செளரிக்கு (பா.ஜ.க) முன்பு தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த மறைந்த பிரமோத் மகாஜன் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள், ராசாவுக்கு முன்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என 2001-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரை அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்தும் இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.
முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கொள்கைப்படி 50 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக உரிமம் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களது ஆவணங்களையும் சிபிஐ ஆய்வு செய்ய உள்ளது.
எப்படியோ பா.ஜ.க ஆட்சியில் ஆரம்பித்து, பலன் அடைய்ந்தது காங்கிரஸ் கூட்டணி.







0 comments:
Post a Comment